குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி இயக்குனர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக்கூட்டத்தை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, ஜனவரி 26ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்க ஏதுவாக கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை தெரியப்படுத்த வேண்டும். கிராம சபைக்கூட்டம் மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக்கூடாது. கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கிராம சபைக்கூட்ட நிகழ்வுகளை நிகழ் நேரத்தில் கண்காணித்திடும் வகையில் கூட்ட நிகழ்வுகளை ‘நம்ம கிராமசபை’ என்கிற கணினி / தொலைபேசி மென்பொருள் செயலி மூலம் உள்ளீடு செய்ய வேண்டும், இது குறித்து அறிக்கையை ஜனவரி 26ஆம் தேதியே அனுப்பி வைக்க வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


