’வன்முறைக் காட்சிகள்’- ஜெயிலர் படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி
எல்லா திரைபடங்களிலும்தான் வன்முறைக் காட்சிகள் உள்ளது என்று கூறி ஜெயிலர் படத்துக்கு வழங்கப்பட்டுள்ள ‘யுஏ’ சான்றிதழை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர் ரஜினி நடித்து ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் படத்தில் வன்முறை காட்சிகள் நிறைந்து இருப்பதாகக் கூறி, வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், வன்முறைக் காட்சிகள் நிறைந்த இந்த படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் “யுஏ” சான்றிதழை வழங்கி உள்ளதாகவும், வில்லன் கதாபாத்திரம், கூலிப்படையினரை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சுத்தியலால் அவர்களை அடித்துக் கொல்வது போலவும், கதாநாயகன், ஒருவரின் தலையை துண்டாக வெட்டுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கத்தி, ரத்தம், வெட்டு, துப்பாக்கி சூடு போன்ற வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், 12 வயதுக்கு குறைவானவர்களும் பார்க்கும் வகையிலான “யுஏ” சான்றிதழ் வழங்கியிருப்பது தவறானது என்றும் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் இந்த படத்திற்கு ‘ஏ’ சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். ஜெயிலர் படத்திற்கு ஜூலை 27ல் வழங்கப்பட்ட “யுஏ” சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கு முடியும் வரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே படம் வெளியாகி பல லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். மேலும் இது போன்ற வன்முறை காட்சிகள் பல திரைப்படங்களில் உள்ளது என்று தெரிவித்தனர். விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்றும் குறிப்பிட்டனர். இதையடுத்து வழக்கை திரும்ப போவதாக மனுதாரர் கூறியதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.