பேருந்து கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அரசு பேருந்து கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற கோரி ராசிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், பேருந்து கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களால் பெண்களுக்கு பாதுகாப்பாற்ற சூழல் ஏற்பட்டுள்ளது என்றும், வெளியில் இருந்து பேருந்துகளுக்குள் பார்க்க முடியாதபடி உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். பேருந்து கண்ணாடிகளில் விளம்பரங்கள் ஒட்டப்படுவதை தவிர்க்க உச்சநீதிமன்றம் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கருத்தில் கொள்ளாமல், அரசுப் பேருந்துகளில் விளம்பரங்கள் ஒட்டியுள்ளது, நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட விதிகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
