டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வை கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 763 மையங்களில், 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். இந்த நிலையில், குரூப்-2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடை குறியீட்டினை டி.என்.பி.எஸ்.சி. https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.
குரூப் 2, 2ஏ தேர்வுக்கான வினாத்தாள்களுடன் கூடிய உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப்பட்ட விடைகள் சரியான விடை ‘டிக்’ குறியீடு மூலம் குறித்துக்காட்டப்பட்டு உள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மேலும் தேர்வின்போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக்கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் ஆகியவற்றை 7 நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தபால் வழியாகவோ , இ-மெயில் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும், செப்டம்பர் 30-ம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணையவழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.
இறுதிசெய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், பொது ஆங்கிலத்தில் வினா எண்கள் 177 முதல் 181 வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள், வினா எண் 177க்கு மேல கொடுக்கப்பட்ட பத்தியில் இருந்து தெரிவிக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.