கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தொடர்பான கொள்கை வகுக்க எடுத்த நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் விளக்கம் அளிக்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில், மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை எனக் கூறி, நிவேதா என்ற மூன்றாம் பாலித்தனவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் விண்ணப்பத்தை 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும், தன்னை சிறப்பு பிரிவினராக கருதவில்லை எனவும், இது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது எனவும் கூறி, கால்நடை மருத்துவ படிப்பில் தனக்கு ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிடக்கோரி நிவேதா மீண்டும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தொடர்பான கொள்கை வகுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து 2 வாரங்களில் விளக்கம் அளிக்கப்படும் என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கின் விசாரணையை அக்டோபர் 25ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்குகளுடன் சேர்த்து, இந்த வழக்கையும் பட்டியலிட உத்தரவிட்டனர்.