விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அரசூர் கூட்ரோட்டில் இருந்து வளையம்பட்டு, மேலமங்கலம், செம்மார், ஏனாதிமங்கலம், ஆகிய இடங்களுக்கு சென்று திருக்கோவிலூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்களையும் மற்றும் பொதுமக்களையும் வி.கே.சசிகலா சந்தித்தார்.


அப்போது மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சேவைகளை மக்களிடையே கொண்டுசேர்க்கும் வகையில் சுற்றுப்பயணம் செய்து வருவதாக சசிகலா தெரிவித்தார். இந்த சுற்றுப்பயணத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஏனாதிமங்கலம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “தமிழக அரசு இந்த ஆண்டு பல பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி, சேலை மற்றும் கரும்பு கொடுக்கவில்லை, ஏனாதிமங்கலம் பகுதியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. நீர்மட்டம் குறைவாக உள்ளதால், தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசு மணல் குவாரி நிறுத்த வேண்டும்” என்றார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ், தனித்தனியாக வேட்பாளர்கள் அறிவிக்க உள்ளனர் என செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு நான் 27 ஆம் தேதி பிறகு வேட்பாளரை அறிவிப்பேன் என வி. கே.சசிகலா தெரிவித்தார்.
