‘கொடியேற்றுவதை நேரில் பார்க்கணும்’ கடிதம் எழுதிய மாணவனின் கனவை நிறைவேற்றிய முதல்வர்
கொடியேற்றுவதை நேரில் பார்க்க ஆசை என்று கடிதம் எழுதிய சிறுவனை பெற்றோருடன் நேரில் அழைத்து அவரது கனவை நிறைவேற்றிய முதல்வரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் கிராமத்தை சேர்ந்த எட்டு வயது மாணவரான லிதர்சன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் கொடியேற்றுவதை நேரில் பார்க்க வேண்டுமென முதலமைச்சருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையின் அடிப்படையில் மாணவர் லிதர்சனும் அவரது தாயாருக்கும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டனர். விருந்தினர் பகுதியில் அமரவைக்கப்பட்ட மாணவர் லிதர்சன், முதலமைச்சர் அணிவகுப்பை பார்வையிட்டு செல்லும் போது முதலமைச்சரை நேரில் பார்த்ததில் உற்சாகமாக காணப்பட்டார்.
அதுமட்டுமின்றி, கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் கொடியேற்றுவதை பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்ததை பார்க்கமுடிந்தது. தான் எழுதய கடிதத்தை முதலமைச்சர் தன்னை அழைத்து கொடியேற்றுவதை பார்க்க வைத்தது மகிழ்ச்சியளிப்பதாக மாணவர் லிதர்சன் தெரிவித்தார். தனது மகன் எழுதிய கடிதத்திற்கு எங்களை அழைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக மாணவனின் தாயார் ஆனந்தவள்ளி தெரிவித்தார்.