spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிரதமர் மோடி தரம் தாழ்ந்து பேச, பேச அவரது தோல்வி உறுதியாகி வருகிறது - செல்வப்பெருந்தகை

பிரதமர் மோடி தரம் தாழ்ந்து பேச, பேச அவரது தோல்வி உறுதியாகி வருகிறது – செல்வப்பெருந்தகை

-

- Advertisement -

செல்வபெருந்தகை

மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற தரம் தாழ்ந்த நச்சுக் கருத்துகளை பிரதமர் மோடி பேச, பேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவைத் தேர்தலின் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, தமது பரப்புரையில் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளை கூறிவருகிறார். தொடக்கத்தில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம்களின் தேர்தல் அறிக்கையைப் போல் இருப்பதாக கூறினார். பிறகு, முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகள் பெறுபவர்கள் என்றும் முத்திரை குத்தி, தனியாரிடம் இருக்கும் செல்வங்களை கைப்பற்றி முஸ்லிம்களுக்கு மறுவிநியோகம் செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், அவதூறான கருத்துகளை கூறினார். ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுகள் நியாயமற்றவை என்ற அடிப்படையில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒன்றிய பட்ஜெட்டில் 15 சதவிகிதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று நேற்று பிரதமர் மோடி மும்பையில் குற்றம்சாட்டி பேசியிருக்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்று தெரியவில்லை ? காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் சம உரிமையோடு, சம வாய்ப்போடு வாழ்வதற்கான உறுதிமொழிகளைத் தான் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கிற வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடி தனது அவதூறு பிரச்சாரத்தின் மூலம் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார். அதில் அவர் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.

தினத்தந்தியின் மூத்த ஆசிரியர் மறைவு- காங்கிரஸ் கட்சி இரங்கல்!

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் மதஅடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்ததாகவும், ஆனால், காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப் பட்டவர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுக்க விரும்புகிறது என்ற குற்றச்சாட்டை மோடி திரும்பத் திரும்ப கூறி வருகிறார். சமூக, கல்வி, பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் தன்மையின் அடிப்படையிலும், சச்சார் குழு பரிந்துரையின் பேரிலும் முஸ்லிம் சமூகங்கள் மாநில, ஒன்றிய ஒ.பி.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு இப்படி ஒதுக்கீடு வழங்கியிருக்கும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும். மோடி 12 ஆண்டுகாலம் முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தில் கூட ஒ.பி.சி. பட்டியலில் முஸ்லிம் சமூகங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டப்படி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோரின் பட்டியலை அந்தந்த மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தரவுகளின் அடிப்படையில் தயார் செய்கிறது. அதில் இடம் பெறுகிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்குத் தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன.

இந்த பின்னணியில் தான் கர்நாடகாவில் 1994 இல் இன்று பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருக்கிற தேவகவுடா அரசு அன்று கொண்டு வந்த முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், கடந்த காலத்தில் எடியூரப்பா அரசு நடைமுறைப்படுத்தியதற்கு மாறாக, கடந்த மார்ச் 2023 இல் கர்நாடகாவில் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசு முஸ்லிம் ஒ.பி.சி.களுக்கான 4 சதவிகித உள்ஒதுக்கீட்டை ரத்து செய்தது. ஆனால், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை இதன்மூலம் கூட்டவில்லை. மாறாக அந்த மாநிலத்தில் உள்ள ஆதிக்க சமூகங்களான லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகர் சமூகத்தினருக்கு தலா இரண்டு சதவிகித இடஒதுக்கீட்டை பொம்மை அரசு உயர்த்தி வழங்கியது. இந்த உத்தரவை உடனடியாக ஏப்ரல் 2023 இல் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதேநேரத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த முஸ்லிம்களுக்கான 4 சதவிகித இடஒதுக்கீடு தொடரும் என்று தீர்ப்பளித்தது. இதற்கு பிறகும் கர்நாடக அரசை மோடி மேற்கோள் காட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

மக்களவை தேர்தல் தொடங்கியதிலிருந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசி வந்த பிரதமர் மோடி, திடீரென ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்து, முஸ்லிம் பாகுபாடு அரசியல் செய்ய மாட்டேன். அப்படி அரசியல் செய்யும் நாளில் நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாக ஆகிவிடுவேன் என்று திடீரென தனது கருத்தை மாற்றிக் கொண்டு அந்தர் பல்டி அடித்திருக்கிறார். இதற்கு என்ன காரணமென்றால் மதரீதியிலான பிரிவினையை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, மத நல்லிணக்கத்துடன் வாழ்வதையே மக்கள் விரும்புகிறார்கள். இந்தப் பின்னணியில் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட பரப்புரையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதோடு, இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள 50 சதவிகித உச்சவரம்பை உயர்த்துவோம் என்று கூறியதற்கு பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின சமுதாயத்தினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், மக்களவை தேர்தல் அரசியல் சூத்திரம் தலைகீழாக மாறி வருகிறது. இதன்மூலம் ஏற்பட்ட சமூகநீதிப் புயலால் மோடியின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற தரம் தாழ்ந்த நச்சுக் கருத்துகளை பிரதமர் மோடி பேச, பேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது. ராகுல்காந்தி தனது பரப்புரையில் கூறியுள்ளதை போல, 2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி ஆட்சி அகற்றப்பட்டு, இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி என்பதே இன்றைய தேர்தல் களம் கூறுகிற செய்தியாகும். இதன்மூலம் இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற காலம் ஏற்படுவதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ