அமைச்சர் உதயநிதியை கண்டித்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்
சனாதனம் குறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதால் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள இந்து திருக்கோயில்களின் தலைமை அலுவலகம் முன்பு ஏராளமான பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்தனர். போராட்டத்திற்கு அனுமதி வழங்காததால் போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் இந்து சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்தும் பதவி விலகக் கோரியும் இன்று ராணிப்பேட்டை, ராஜேஸ்வரி தியேட்டர் அருகில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை கைது செய்தது காவல்துறை.. மாவட்ட தலைவர் உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கைதானார்கள்.


