பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசிதழ் வெளியிடப்பட்டு உள்ளது.


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30-ம் தேதி கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பல பகுதிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வீடுகள், விவசாய நிலங்கள் சேதமடைந்தன. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.

பெஞ்சல் புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், 2 நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. பெஞ்சல் தற்காலிக, நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி வழங்குமாறு மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்து இருந்தார்.
இந்த நிலையில், பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பேரிடர் நிதி மட்டுமல்லாமல் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


