குடியரசு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் போன்ற விருதுகளை வழங்கி கெளரவித்தார்.


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து அணி வகுப்பு மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்கினார். அதன்படி, வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் பெ.சரவணன் என்பவருக்கும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் செவிலியர் ஜெயகுமார் பொன்னரசுக்கும், பொதுமக்கள் பிரிவில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ.அந்தோணிசாமி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன்.நா. ஸ்ரீ கிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.செல்வம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்,கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஏ.இனயத்துல்லாவுக்கும், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சென்னை மாவட்டம் நுண்ணறிவு பிரிவு தலைமையகத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் த.எ.பிரியதர்ஷினிக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் கா.ஜெயமோகனுக்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ச.சகாதேவனுக்கும், விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பா.இனாயத் பாஷாவுக்கும், செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் நிலையம், அயல்பணி மத்திய நுண்ணறிவு பிரிவு (அமலாக்கம்) தலைமைக் காவலர் சு.சிவனேசனுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த போலீஸ் நிலையத்திற்கான முதல் பரிசு கோப்பை திருப்பூர் மாநகரத்தில் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கும், திருச்சி மாநகரத்தில் கோட்டை காவல் நிலையத்திற்கு இரண்டாம் பரிசும், திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் வட்டகாவல் நிலையத்திற்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.
திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கான வேளாண்மைத் துறை சிறப்பு விருது, புதுக்கோட்டை மாவட்டத்தில், பொன்னமராவதி வட்டம், ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்த க.வசந்தா கணேசன் உள்ளிட்ட அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பதக்கம் பெறுவோர், குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
