ஆலங்குடி காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலம் தர்மர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் மணிகண்டன் (23). இவர் சாக்கோட்டையில் உள்ள நொண்டி முனீஸ்வரர் கோயில் திருவிழாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வரும் சிவகங்கை மாவட்டம் புதுவயல் அம்பேத்கர் நகரை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் பிரதீபாவை (20). அங்கிருந்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பிரதீபாவை காணவில்லை என்று சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை காவல் நிலையத்தில் பிரதீபா தாயார் உமா கடந்த 1ம் தேதி புகார் மனு கொடுத்துள்ளார். இந்நிலையில் போலீசார் பெண் காணவில்லை என்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த நான்காம் தேதி பழனி முருகன் கோயிலில் வைத்து மணிகண்டனும் பிரதீபாவும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணம் செய்து கொண்ட இருவரும் பெற்றோர்களால் பிரச்சனை வரக்கூடும் என்று எண்ணி இன்று ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து இது குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் சாக்கோட்டை காவல் நிலையத்திற்கும், அதேபோல் பிரதீபா பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை எடுத்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சேர்ந்த சாக்கோட்டை காவல் துறையினர் காதல் திருமணம் செய்து கொண்ட இருவரையும் அங்கிருந்து சிவகங்கைக்கு அழைத்துச் சென்றனர்.