
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாகன் உள்பட இரண்டு பேரை கோயில் யனை மிதித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்னும் பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த உதயக்குமார் என்னும் பாகன் இத யானையை பராமரித்து வந்தார். இந்நிலையில் பாகன் உதயக்குமாரைக் காண அவரது உறவினரான சிசுபாலன் என்பவர் வந்துள்ளார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான சிசுபாலன் யானையுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார். அதன்படியே யானையின் அருகில் நின்று செல்ஃபி எடுத்த அவர், யானையின் உடலில் தட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்ரோஷமடைந்த யானை, சிசுபாலனை தாக்கி தூக்கி வீசியதோடு தடுக்க வந்த பாகன் உதயகுமாரையும் மிதித்து கொன்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மருத்துவக் குழுவினர் யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் தெய்வானை பெண் யானை என்பதால் அதற்கு மதம் பிடிக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் கோயிலில் 3 நாள் தங்கி யானைக்கு சிகிச்சை அளிக்கவும் திட்டமிட்டுள்ள கால்நடை மருத்துவக்குழு, யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை மிதித்து 2 பேர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோயில் நடை 45 நிமிடங்கள் சாத்தப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.