மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களை பரிசளியுங்கள்- உதயநிதி ஸ்டாலின்
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளோ, அல்லது பிறருக்கோ பரிசளிக்கும் போது மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களை வாங்கி பரிசளிக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப்பேரவையில் இன்று வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறை சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மானிய கோரிக்கை மீதான விவாத்தில் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், எல்லா கோட்டைகளும் அஸ்திவாரதின் மீது தான் கட்டப்படும் திராவிட இயக்க கோட்டை ஈரோட்டு கை தடியால் கட்டப்பட்டது. அரியலூர் மருத்துவ கல்லூரி கூட்டறங்கிற்கு அனிதாவின் பெயரை சூட்டிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கும் அளவில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்கள் பொருளாதாரத்தில் சுயசார்பு பெற்றிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசு மகளிர் உரிமை தொகை புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் இந்தியாவே திரும்பி பார்க்க வைத்துள்ளன. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் சராசரியாக 25ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டது. மீண்டும் திமுக ஆட்சியமைந்த உடன் இரண்டு ஆண்டுகளில் 86,000 சுய உதவிக் குழுக்கள் அமைத்து சாதனை புரிந்துள்ளது. 70,800 சுயஉதவி குழுக்களுக்கு 87.37 கோடி சுழல் நிதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 50,000 உற்பத்தியாளர்களுக்கு 50 கோடி தொடக்க நிதி, 3 மாதங்களில் 1000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10,000 கோடி வங்கி இணைப்பு, அனைத்து கிராமங்களும் நீடித்த நிலையான வளர்ச்சியை அடைய 20 கோடியில் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் 84, 815 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டது. வெறும் கணக்கு காட்டுவதற்காக செய்தவர்கள் மத்தியில், 2021ல் திமுக ஆட்சி அமைந்ததன் பின் இரண்டு ஆண்டுகளில் அதன் இலக்கான 45 ஆயிரம் கோடியும் தாண்டி, 46, 414 கோடியை என்ற சாதனையை புரிந்துள்ளோம்” என்றார்.