நடிகர் விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார்- உதயநிதி ஸ்டாலின்
அரசியலுக்கு யார் வரவேண்டும், வர வேண்டும் எனக் கூற யாருக்கும் உரிமையில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்-ன் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவியர்களுக்கு தொகுதி வாரியாக கல்வி விருது, ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் விஜய், “வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் நீங்கள். உங்களை பார்த்தால் என் பள்ளி கால ஞாபகம் வருகிறது. காடு இருந்தா எடுத்துக்குவாங்க, ரூபாய் இருந்தா எடுத்துக்குவாங்க ஆனா படிப்பு இருந்தா மதிப்பாங்கங்குற படம் டயலாக் தான் இந்த நிகழ்வுக்கே காரணம். ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்ன்னா, ஒரு தொகுதிக்கு 15 கோடின்னு வெச்சுக்கிட்டா, அதுக்கு முன்னாடி அவர் எவ்வளவு சம்பாதித்திருப்பார்? உங்க வீட்ல காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்கனு சொல்லுங்க. முயற்சி பண்ணுங்க. இது நடந்தால், உங்க கல்வி முறை முழுமை அடையும்” என பேசினார்.

நடிகர் விஜய்-ன் பேச்சுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என நடிகர் விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார். அரசியலுக்கு யார் வரவேண்டும், வர வேண்டும் எனக் கூற யாருக்கும் உரிமையில்லை. பாஜகவின் குரலாகவே ஆளுநர் பேசி வருகிறார்” என்றார்.