எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் போல் இல்லாமல் திருமண தம்பதிகள் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


சென்னை புரசைவாக்கம் குயப்பேட்டை பகுதியில் 6.02 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தை திறந்து வைத்து 9 ஜோடிகளுக்கு சீர்வரிசியுடன் இலவச திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மேடையில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மணமக்கள் தமிழும் கலைஞரும் போல, ஸ்டாலினும் உழைப்பும் போல வாழ வேண்டும். மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போல் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள். என்னுடைய காரில் தவறுதலாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் காரில் ஏறச் சென்றார்கள். ஆனால் அப்போது காரில் ஏறினாலும் பரவாயில்லை கமலாலயத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள் என்று சொன்னேன்.
சட்டமன்றத்தில் பேசும் போது எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் சொன்னார். ஆனால் நேற்று இரண்டு மணி நேரம் கார் கமலாலயத்தில் தான் இருந்தது. இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்து கிடக்கின்றனர். கேடுகெட்ட வெட்கமில்லாத ஒரு எதிர்க்கட்சியாக உள்ளார்கள், இதற்கு மேல் நான் பேசவில்லை” என சாடினார்.
