செல்போன் தொலைந்துவிட்டால் பொதுமக்கள் செய்ய வேண்டியவை குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
தமிழ்நாடு கைப்பேசி சாதனகுற்றங்களை எதிர்க்கும் நோக்கில், இணையவழி குற்றப்பிரிவு மற்றும் தொலை தொடர்பு துறை (DoT) இணைந்து நடத்திய CEIR சிறப்பு விருதளிப்பு விழா மற்றும் பயிலரங்கம் நேற்று இணையவழி குற்றப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த பயிலரங்கில் தமிழ்நாடு தொலைதொடர்பு துறை சார்பில் துணை இயக்குநர் (பாதுகாப்பு) சுபாசாய்கேசே. IT.S.அவர்கள் CEIR. சஞ்சார்சாதி. FRI மற்றும் மற்ற முக்கிய முயற்சிகள் குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினார்.

இந்த நிகழ்வில் தமிழக சைபர் கிரைம் ஏடிஜிபி சந்தீப் மித்தல் பொதுமக்களை தங்களின் மொபைல் போன் இழந்தவுடன் CEIR-di புகார் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினார். IMEI எண்ணை தடை செய்வது குற்றங்களைத் தடுக்க முதல் கட்ட நடவடிக்கையாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இணையவழி குற்றப்பிரிவும் தொலை தொடர்பு துறையும் இணைந்து நடத்திய இந்த விழாவில் CEIR திட்டத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்காக காவல் நிலையங்கள் மற்றும் காவல் மாவட்டங்கள் பாராட்டப்பட்டன. முதல் மூன்று இடங்களைப் பெற்ற காவல் நிலையங்கள் திருப்பூர் நகரின் வேலம்பாளையம் காவல் நிலையம், மதுரை நகரின் தல்லாகுளம் காவல் நிலையம், மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி நகர காவல் நிலையம் ஆகியவை பாராட்டுச்சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் பணவெகுமதி ஆகியவற்றுடன் கௌரவிக்கப்பட்டனர். அதேபோல், சிறந்த செயல்பாட்டுக்காக மதுரை மாவட்டம், திருப்பூர் நகரம் மற்றும் சேலம் நகரம் ஆகிய 3 காவல் பிரிவுகளும் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசுடன் கௌரவிக்கப்பட்டனர்.
பொது மக்களுக்கு அறிவுரையை சைபர் கிரைம் சார்பில் வழங்கப்பட்டது.
அதில், “உங்கள் மொபைல் சாதனம் தொலைந்தவுடன் அல்லது திருடப்பட்டவுடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கவும். CEIR போர்ட்டல் வழியாக IMEI எண்ணைத் தடை செய்து தவறான பயன்பாட்டைத் தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உங்கள் மொபைல் சாதனத்தின் IMEI எண்ணை குறிப் எடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கவும். இதை ‘#06# எண் அழைப்பதன் மூலம் அல்லது கைப்பேசி வாங்கிய அட்டை பெட்டியில் பார்க்கலாம்.
Find My Device (ஆண்ட்ராய்டிற்கு) அல்லது Find My iPhone (ஆப்பிளிற்கு) போன்ற இடமறிவு சேவைகளை இயக்கி, உங்கள் கைப்பேசியை தொலை நிலையிலிருந்து தேடுவதை உறுதிசெய்யவும்.

வலுவான திரைபூட்டு (PIN, கடவுச் சொல் அல்லது கைரேகை) அமைத்து அனுமதியின்றி அணுகுவதைத் தடையிடவும்.
சாதனம் மீளப்பெற முடியாவிட்டால், உங்கள் தொலைப்பேசியில் உள்ள
தரவுகளை Erase/Remote Wipe மூலம் அழிக்கும் வகையான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்.
முக்கியமான தரவுகளான, புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை முறையாக கிளவுட் அல்லது வெளியே சேமிப்பிடங்களில் காப்பு எடுக்கவும்.
செயலிகளை பதிவிறக்கும் போது கவனமாக இருக்கவும். Google Play அல்லது Apple App Store போன்ற நம்பகமான மூலங்களிலிருந்து மட்டும் பதிவிறக்கவும்” என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், புகார் பதிவுசெய்ய:
“சைபர் மோசடிக்கு ஆளானதாக சந்தேகமிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கவனித்தால் உடனடியாக இலவச உதவி எண் 1930யை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



