Homeசெய்திகள்தமிழ்நாடுகடனை திருப்பி தராததால் பெண்கள், குழந்தைகள் வீட்டிற்குள் சிறைபிடிப்பு

கடனை திருப்பி தராததால் பெண்கள், குழந்தைகள் வீட்டிற்குள் சிறைபிடிப்பு

-

- Advertisement -

திண்டுக்கல்லில் பணம் கடன் வாங்கிய விவகாரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேரை வீட்டில் கடந்த 3 நாட்களாக சிறை வைத்த கும்பல் போலீசார் அதிரடியாக மீட்பு.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் திண்ணப்பன் (வயது 56) இவர் திண்டுக்கல் மற்றும் பல ஊர்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் காரைக்குடியை சேர்ந்த ராஜா கருப்பையா என்பவரிடம் பல ஆண்டுகளாக வட்டிக்கு கோடிக்கணக்கில் வாங்கி வரவு செலவு செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜா கருப்பையாவிடம் ரூ 4 கோடி கடனாக பெற்றுள்ளார்.இந்தத் தொகைக்கு மாதம் மாதம் வட்டி செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் ரூ 2 கோடி பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். மீதி தொகை மற்றும் அதற்கு வட்டி கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இதற்காக தனது சொத்து பத்திரத்தை அடமானமாக திண்ணப்பன் காரைக்குடியைச் சேர்ந்த ராஜா கருப்பையாவிடம் கொடுத்துள்ளார். இதனிடையே ராஜா கருப்பையா தன்னிடம் வேலை பார்க்கும் ரவி, சரவணன் ஆகிய ஆகியோரை கடந்த 17ஆம் தேதி திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள திண்ணப்பன் வீட்டுக்கு சென்று அசலையும் வட்டியையும் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

கடனை திருப்பி தராததால் பெண்கள், குழந்தைகள் வீட்டிற்குள்  சிறைபிடிப்பு                       திண்ணப்பன்

இதனையடுத்து ரவி சரவணன் திண்டுக்கல்லில் உள்ள திண்ணப்பன் வீட்டிற்கு வருகை தந்தனர். பின்னர் தனது முதலாளி கூறிபடி அசலையும் வட்டியையும் உடனடியாக தரவேண்டும் என கேட்டுள்ளனர். அதற்குப் திண்ணப்பன் உடனடியாக பணம் தர முடியாது எனக் கூறியுள்ளார். அசல் மற்றும் வட்டி பணம் கொடுக்கும் வரை வீட்டில் உள்ள அனைவரையும் வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் சிறை பிடித்து வைக்கும்படி செல்போன் மூலம் ராஜா கருப்பையா தனது வேலையாட்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து திண்ணப்பன் வீட்டில் இருந்த இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேரை சரவணன் மற்றும் ரவி ஆகியோர் கடந்த மூன்று நாட்களாக சிறை பிடித்து வைத்தனர். மேலும் வீட்டில் குடியேறுவதற்காக கட்டில், மெத்தை, பீரோ, பிரிட்ஜ், கிரைண்டர், சேர், டேபிள், போன்ற வீட்டு உபயோக பொருட்களையும் ரவி மற்றும் சரவணன் கொண்டு வந்து வீட்டில் இறக்கி வைத்தனர். இதனால் கடந்த மூன்று தினங்களாக திண்ணப்பன் குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தனர்.

இதனிடையே தனது உறவினர்கள் மூலம் நேற்று (19.10.23) நள்ளிரவு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்பி யின் உத்தரவின் பேரில் வடக்கு காவல் நிலைய போலீசார் அதிரடியாக திண்ணப்பன் வீட்டுக்குள் புகுந்து சிறை வைக்கப்பட்டிருந்த பெண்கள் குழந்தைகள் உட்பட ஐந்து பேரை மீட்டனர். மேலும் சிறை பிடித்து வைத்திருந்த ராஜா கருப்பையாவின் வேலையாட்களான ரவி, சரவணன் ஆகியோரை விசாரணைக்காக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக இன்று திண்ணப்பன் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மேலும் வீட்டிலிருந்த பணம் நகை ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி இன்று 20.10.23 இரவு ராஜா கருப்பையா, ரவி, சரவணன் உட்பட ஆறு பேர் மீது Ipc 147 கூட்டம் சேர்த்தல், lpc148 கலவரம் செய்தல், lpc 448 வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், lpc 294(b) தகாத வார்த்தைகளல் பேசுதல்,lpc 342 வீட்டு சிறை வைப்பது Ipc323 காயம் ஏற்படுத்துதல் Ipc506(1) கொலை மிரட்டல், ipc 379 திருடுதல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் கொண்டு வந்த பீரோ பிரிட்ஜ் கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்களை போலீசார் முன்னிலையில் மீண்டும் லாரியில் ஏற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.

MUST READ