மகளிர் உரிமைத் தொகைக்கோரி பெண்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் 295 பேர் மகளிர் உரிமை தொலைக்காக விண்ணப்பம் செய்திருந்த நிலையில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை ஆலங்குடி வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினரிடம் முறையிட்டும் தங்களுக்கு அரசின் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என குற்றம் சாட்டி இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கீரமங்கலத்திலிருந்து கொத்தமங்கலம் வழியாக ஆலங்குடி சென்ற அரசு பேருந்தையும் அவர்கள் சிறை பிடித்ததால் அந்த பேருந்தில் இன்று முதலமைச்சர் திறனாய்வு தேர்வு எழுத சென்ற 11ம் வகுப்பு மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிப்பிற்கு உள்ளாகினர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த மற்ற பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்ட நிலையில் அந்த ஒரு பேருந்து மட்டும் போராட்டக்காரர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்ட சூழலில் அதன் பின் அவர்கள் அங்கிருந்து தேர்வுக்கு நடந்து செல்ல தொடங்கினர். இதனைப் பார்த்த சிலர் அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தில் மாணவ மாணவிகளை தேர்வு எழுத அனுப்பி வைத்தனர். இதன் பின்பும் போராட்டம் தொடர்ந்ததால் அங்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் முறையாக ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அளித்ததன் அடிப்படையில் அப்பகுதி பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
