ரவுடியிசத்தை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம், ரவுடியிசம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி பகலவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள சனமங்கலம் வனப்பகுதியில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடி கொம்பன் என்கிற ஜெகன் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டார் ஜெகன் தாக்கியதில் காயம் அடைந்த எஸ்.ஐ வினோத் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் மற்றும் திருச்சி சரக டி ஐ ஜி பகலவன் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி ஐ ஜி பகலவன் கூறுகையில், “ரவுடி கொம்பன் என்கின்ற ஜெகன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பொறுத்தவரை, அவரை தேடி சென்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். கை துப்பாக்கி, மற்றும் அருவாள் உள்ளிட்ட ஆயுதத்தை வைத்து போலீசாரை தாக்க முற்பட்டார். இதில் காவல் உதவி ஆய்வாளர் வினோத் காயமடைந்துள்ளார். காயமடைந்துள்ள உதவி ஆய்வாளர் நலமுடன் உள்ளார். திருச்சி சரகத்தில் ரவுடிசத்திற்கு இடம் கிடையாது. இது போன்ற எண்ணம் உடையவர்களை ஒருபோதும் காவல்துறை அனுமதிக்காது. நடவடிக்கை கடுமையாக இருக்கும். கடந்த மூன்று, நான்கு நாட்களாக ரவுடிகளை போலீசார் கண்காணித்து வந்தனர். அந்த வகையில் சனமங்கலம் வன பகுதியில் துப்பாக்கியுடன் பணம் பறிப்பு, உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. அப்பகுதியில் சமூக விரோதிகள் அராஜகம் செய்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொழுது, ஜெகன் என்ற இந்த நபர் அங்கு இருந்தார். ஜெகனும் தேடப்படும் குற்றவாளி என்பதால் அவரை பிடிக்க போலீசார் முற்பட்டனர். அப்பொழுது துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு போலீசாரை தாக்க முற்பட்டார். இதனால் தற்காப்பிற்காக போலீசார் சுட்டதில் ஜெகன் உயிரிழந்தார். ஜெகன் மீது நான்கு கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் தாதாக்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.