செய்திகள்

மகளிர் உரிமை மாநாடு – சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை

Published by
Veera
Share

சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, இன்று இரவு சென்னை வருகையை ஒட்டி, டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு சம்பந்தமாக, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். சென்னை விமான நிலையத்தில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு.

மகளிர் உரிமை மாநாடு - சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை

திமுக மகளிர் அணி சார்பில், மகளிர் உரிமை மாநாடு, சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ  மைதானத்தில், நாளை  சனிக்கிழமை மாலை நடக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், “இந்தியா” கூட்டணி கட்சியைச் சேர்ந்த முன்னணி பெண் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  சுஷ்மிதா தேவ், பீகார் மாநில பெண் அமைச்சர் லேஷி சிங் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த பெண் தலைவர்கள், கலந்து கொள்கின்றனர்.

 

இவர்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஆகியோர் உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கின்றனர். இன்று வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னை வரும் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு, முழு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் டெல்லியில் இருந்து, சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், சென்னை வந்துள்ளனர். அவர்கள் தலைமையில், சென்னை  விமான நிலையத்தில்  சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், பி சி ஏ எஸ் அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள், மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலதரப்பு முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், விமான நிலையத்தின் உள்பகுதியில், அவர்களை வரவேற்க, யார் யாரை  அனுமதிப்பது, உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி ஆய்வு  செய்யப்பட்டது.

அதோடு சென்னை  விமான நிலையத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்க  முடிவு செய்யப்பட்டது. தகுந்த  பாஸ்கள், அடையாள அட்டைகள் இல்லாத நபர்களை விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும். சோனியா காந்தி, பிரியங்கா காந்தி பயணிக்கும் கார்கள், செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல், பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று, டெல்லியில் இருந்து வந்திருந்த சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதற்கிடையே சோனியா காந்தியை வரவேற்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையம் வருவார் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து முதலமைச்சரும் சென்னை விமான நிலையம் வருவதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படுகிறது. அதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், இன்று சென்னை பழைய விமான நிலையத்தில் நடக்கிறது.

சென்னை வரும் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோலா நட்சத்திர விடுதியில் தங்குகின்றனர். இவர்கள் ஞாயிறு காலை 7 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

Show comments
Published by
Veera
Tags: "I.N.D.I.A" M.K. Stalin MAGALIR URIMAI MANADU Priyanka Gandhi Sonia Gandhi இந்தியா சோனியா காந்தி பிரியங்கா காந்தி மகளிர் உரிமை மாநாடு மு.க.ஸ்டாலின்