சீன பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதித்த என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் சீனாவுடனான வர்த்தகப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
சீன பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த புதிய வரிவிதிப்பு வரும் நவம்பர் 1-ம் தெதி முதல் அமலாகும் எனவும் தெரிவித்துள்ளாா். இந்த அறிவிப்பு, அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சீன இறக்குமதிகளுக்கு 30% வரி அமலில் உள்ள நிலையில், வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மொத்தம் 130% வரி விதிக்கப்பட உள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய வர்த்தக தடையாகக் குறிப்பிடப்படுகிறது.

சீனா சர்வதேச வர்த்தகத்தில் “அசாதாரணமான ஆக்ரோஷமான நிலைப்பாட்டை” எடுத்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச வர்த்தகத்தில் ஆணவப்போக்குடன் செயல்படும் சீனாவால் உலகின் அனைத்து நாடுகளும் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா். அது உலக நாடுகளுக்கு விரோதமான கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும், இது சர்வதேச வர்த்தகத்தில் கேள்விப்படாத, தார்மீக அவமானம் என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளாா்.
தங்களது அரிய கனிம வளங்களை ஏற்றுமதி செய்ய சீனா கடும் கட்டுபாடுகள் விதித்த நிலையில் சீனாவின் நிலைப்பாட்டை சுட்டிக் காட்டி, ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இருந்த திட்டத்தை டிரம்ப் ரத்து செய்துள்ளார்.
மேலும், சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா “வலுவான எதிர் நடவடிக்கைகள்” எடுக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த அறிவிப்பு உலகளாவிய பொருளாதார சந்தைகளில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், வர்த்தக உறவுகளில் புதிய பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது.
பெண்கள் சக்தி என்று பிரதமர் மோடி பேசுவது, வெற்றுக் கோஷம் – செல்வப்பெருந்தகை காட்டம்


