1131. காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி
கலைஞர் குறல் விளக்கம் – காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக, மடலூர்தலைத் தவிர. வலிமையான துணை வேறு எதுவுமில்லை.

1132. நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து
கலைஞர் குறல் விளக்கம் – எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.
1133. நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்
கலைஞர் குறல் விளக்கம் – நல்ல ஆண்மையையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.
1134. காமக் கடும்புனால் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை
கலைஞர் குறல் விளக்கம் – காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.
1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்
கலைஞர் குறல் விளக்கம் – மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்.
1136. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்
கலைஞர் குறல் விளக்கம் – காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன: எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
1137. கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்
கலைஞர் குறல் விளக்கம் – கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும் கூடப் பொறுத்துக்கொண்டு. மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.
1138. நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்
கலைஞர் குறல் விளக்கம் – பாவம் இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர் என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.
1139. அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
மறுகின் மறுகும் மருண்டு
கலைஞர் குறல் விளக்கம் – என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும் !
1140. யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு
கலைஞர் குறல் விளக்கம் – காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.