Homeதிருக்குறள்32 - இன்னா செய்யாமை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

32 – இன்னா செய்யாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

32 - இன்னா செய்யாமை  -  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

311. சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
        செய்யாமை மாசற்றார் கோள்

கலைஞர் குறல் விளக்கம்  – மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குக் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.

312. கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
        செய்யாமை மாசற்றார் கோள்

கலைஞர் குறல் விளக்கம்  – சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.

313. செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
        உய்யா விழுமந் தரும்

கலைஞர் குறல் விளக்கம்  – யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.

314. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
        நன்னயஞ் செய்து விடல்

கலைஞர் குறல் விளக்கம்  – நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

315. அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
        தந்நோய்போற் போற்றாக் கடை

கலைஞர் குறல் விளக்கம்  – பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.

316. இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
        வேண்டும் பிறன்கட் செயல்

கலைஞர் குறல் விளக்கம்  – ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

317. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
        மாணாசெய் யாமை தலை.

கலைஞர் குறல் விளக்கம்  – எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.

318. தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
        மன்னுயிர்க் கின்னா செயல்

கலைஞர் குறல் விளக்கம்  – பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?

319. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
        பிற்பகல் தாமே வரும்

கலைஞர் குறல் விளக்கம்  – பிறருக்குத் தீங்கு விளைத்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே. அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.

320. நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
        நோயின்மை வேண்டு பவர்

கலைஞர் குறல் விளக்கம்  – தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.

MUST READ