Homeதிருக்குறள்44 – குற்றங்கடிதல் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

44 – குற்றங்கடிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

44 – குற்றங்கடிதல் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

431. செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
        பெருக்கம் பெருமித நீர்த்து

கலைஞர் குறல் விளக்கம்  – இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.

432. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
        உவகையும் ஏதம் இறைக்கு

கலைஞர் குறல் விளக்கம்  – மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.

433. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
        கொள்வர் பழிநாணு வார்

கலைஞர் குறல் விளக்கம்  – பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

434. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
       அற்றந் தரூஉம் பகை

கலைஞர் குறல் விளக்கம்  – குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
        வைத்தூறு போலக் கெடும்

கலைஞர் குறல் விளக்கம்  – முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.

436. தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
       என்குற்ற மாகும் இறைக்கு

கலைஞர் குறல் விளக்கம்  – முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?

437. செயற்பால செய்யா திவறியான் செல்வம்
        உயற்பால தன்றிக் கெடும்

கலைஞர் குறல் விளக்கம்  – நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.

438. பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
        எண்ணப் படுவதொன் றன்று

கலைஞர் குறல் விளக்கம்  – எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான்.

439. வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
        நன்றி பயவா வினை

கலைஞர் குறல் விளக்கம்  – எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.

440. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
        ஏதில ஏதிலார் நூல்

கலைஞர் குறல் விளக்கம்  – தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.

MUST READ