Homeதிருக்குறள்49 – காலமறிதல் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

49 – காலமறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

49 – காலமறிதல் , கலைஞர் குறல் விளக்கம்  , திருக்குறள்,

481. பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
       வேந்தர்க்கு வேண்டும் பொழுது

கலைஞர் குறல் விளக்கம்  – பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

482. பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
        தீராமை ஆர்க்குங் கயிறு

கலைஞர் குறல் விளக்கம்  – காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

483. அருவினை யென்ப உளவோ கருவியாற்
        கால மறிந்து செயின்

கலைஞர் குறல் விளக்கம்  – தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.

484. ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
        கருதி இடத்தாற் செயின்

கலைஞர் குறல் விளக்கம்  – உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.

485. காலங் கருதி இருப்பர் கலங்காது
        ஞாலங் கருது பவர்

கலைஞர் குறல் விளக்கம்  – கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

486. ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
       தாக்கற்குப் பேருந் தகைத்து

கலைஞர் குறல் விளக்கம்  – கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.

487. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
        துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

கலைஞர் குறல் விளக்கம்  – பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.

488. செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
        காணிற் கிழக்காந் தலை

கலைஞர் குறல் விளக்கம்  – பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.

489. எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
        செய்தற் கரிய செயல்

கலைஞர் குறல் விளக்கம்  – கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.

490. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
        குத்தொக்க சீர்த்த இடத்து

கலைஞர் குறல் விளக்கம்  – காலம் கைகூடும் வரையில் கொக்குப்போல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.

MUST READ