spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்5 - இல்வாழ்க்கை

5 – இல்வாழ்க்கை

-

- Advertisement -

5 – இல்வாழ்க்கை, கலைஞர் குறள் விளக்கம், திருக்குறள்

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
      நல்லாற்றின் நின்ற துணை.

கலைஞர் குறல் விளக்கம் – பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

we-r-hiring

42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
     இல்வாழ்வான் என்பான் துணை.

கலைஞர் குறல் விளக்கம் – பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.

43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
       ஐம்புலத்தா றோம்பல் தலை.

கலைஞர் குறல் விளக்கம் – வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக் குரியனவாம்.

44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
       வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

கலைஞர் குறல் விளக்கம் – பழிக்கு அஞ்சாமல் சேர்ந்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்தபொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
       பண்பும் பயனும் அது.

கலைஞர் குறல் விளக்கம் – இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
      போஒய்ப் பெறுவ தெவன்.

கலைஞர் குறல் விளக்கம் – அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.

47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
      முயல்வாருள் எல்லாம் தலை.

கலைஞர் குறல் விளக்கம் – நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுனர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

48. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
      நோற்பாரின் நோன்மை உடைத்து.

கலைஞர் குறல் விளக்கம் – தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.

49. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
      பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

கலைஞர் குறல் விளக்கம் – பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.

50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
      தெய்வத்துள் வைக்கப் படும்.

கலைஞர் குறல் விளக்கம் – தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

MUST READ