701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி
கலைஞர் குறல் விளக்கம் – ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கு அணியாவான்.
702. ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்
கலைஞர் குறல் விளக்கம் – ஒருவன் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால். அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.
703. குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்
கலைஞர் குறல் விளக்கம் – ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும்.
704. குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு
கலைஞர் குறல் விளக்கம் – உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும் . ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும் உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.
705. குறிப்பிற் குறிப்புணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்
கலைஞர் குறல் விளக்கம் – ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டிட விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியா கண்கள் இருந்தும் என்ன பயன்?
706. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
கலைஞர் குறல் விளக்கம் – கண்ணாடி, தனக்கு எதிரில் உள்ளதைக் காட்டுவதுபோல் ஒருவரது மனத்தில் உள்ளதை அவரது முகம் காட்டி விடும்.
707. முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்
கலைஞர் குறல் விளக்கம் – உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.
708. முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்
கலைஞர் குறல் விளக்கம் – அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமை யிருப்பின், அவர், ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.
709. பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்
கலைஞர் குறல் விளக்கம் – பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள். ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.
710. நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்
கண்ணல்ல தில்லை பிற
கலைஞர் குறல் விளக்கம் – நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்குப் பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.