Homeதிருக்குறள்99 – சான்றாண்மை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

99 – சான்றாண்மை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

99 – சான்றாண்மை, கலைஞர் விளக்க உரை, திருக்குறள்,

981. கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
        சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

கலைஞர் குறல் விளக்கம் – ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.

982. குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
        எந்நலத் துள்ளதூஉ மன்று

கலைஞர் குறல் விளக்கம் – நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல.

983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
        டைந்துசால் பூன்றிய தூண்

கலைஞர் குறல் விளக்கம் – அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.

984. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
        சொல்லா நலத்தது சால்பு

கலைஞர் குறல் விளக்கம் – உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிச் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.

985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
        மாற்றாரை மாற்றும் படை

கலைஞர் குறல் விளக்கம் – ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.

986. சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
       துலையல்லார் கண்ணும் கொளல்.

கலைஞர் குறல் விளக்கம் – சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்.

987. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
        என்ன பயத்ததோ சால்பு

கலைஞர் குறல் விளக்கம் – தமக்குத் தீமை செய்தவருக்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?

988. இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
        திண்மையுண் டாகப் பெறின்

கலைஞர் குறல் விளக்கம் – சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.

989. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
       காழி யெனப்படு வார்

கலைஞர் குறல் விளக்கம் – தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம்புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.

990. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
        தாங்காது மன்னோ பொறை

கலைஞர் குறல் விளக்கம் – சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.

MUST READ