ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு , தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் , சுயேச்சை கட்சி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 2 லட்சத்தை 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்துள்ளனர். இதுதவிர 398 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்த வாக்குகள் இன்று ஈரோட்டில் உள்ளா சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையனது, 2 அறைகளில் 16 மேசைகள் அமைக்கப்பட்டு 15 சுற்றுகளாக நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை பெற்று வந்தார். அதன்படி 66,575 வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். 15 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,981 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் 7,984 , தேமுதிக சார்பில் ஆனந்த் 1,115 வாக்குகளும் பெற்றுள்ளனர்.