தனுஷ் நடிப்பில் உருவாகும் இட்லி கடை படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அதைத்தொடர்ந்து இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படம் தனுஷின் 52வது படமாகும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். கிரண் கௌசிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாத இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் 2025 ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நேற்று (நவம்பர் 7) வெளியான போஸ்டரில் சங்கராபுரம் என்று எழுதப்பட்ட பேருந்து ஒன்று காண்பிக்கப்பட்டது. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் சிவனேசன் இட்லி கடை என்ற இட்லி கடை ஒன்றை நோக்கி நடிகர் தனுஷ் நடப்பது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் போன்ற மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.