2018ம் ஆண்டிலிருந்து நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 684 நீதிபதிகளில் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 21 பேர் மட்டுமே மத்திய சட்ட அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்
நாடாளுமன்ற மாநிலங்களவையில், திமுக உறுப்பினரும் வழக்கறிஞருமான பி.வில்சன் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில், இட ஒதுக்கீட்டு விவரங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் காலி பணியிடங்கள் தொடர்பான கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில், “உயர் நீதிமன்ற நீதிபதிகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்பட்ட வகுப்பினர் என பிரதிநிதித்துவம் வாரியான தரவுகள் பராமரிக்கப்படவில்லை. இருப்பினும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட 684 நீதிபதிகளில் 21 பேர் தாழ்த்தப்பட்டோர், 14 பேர் பழங்குடியினர், 82 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 37 பேர் சிறுபான்மையினர் எனத், தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.”
அந்த வகையில், மீதமுள்ள உயர் வகுப்பினர் பிரிவின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 567 பேர், அதாவது 82.53% என கணக்கிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிப்பதில் எந்த வகையான பிரிவின் கீழும் ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பில் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
காலிப்பணியிடங்களை பொறுத்தவரை கடந்த அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி 1122 பணியிடங்களில் 360 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


