தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை , அதன் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாக இருக்கிறது என்று இந்து என்.ராம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளாா்.
அகில இந்திய கணக்கு தணிக்கை துறை அலுவலர்கள் சங்கத்தின் 50வது மாநில மாநாடு சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய இந்து என்.ராம், இந்திய கணக்கு தணிக்கை துறையின் நெருக்கடியான நேரத்தில் இந்த மாநாடு நடக்கிறது. அரசியல் அமைப்பு சட்டம் கணக்கு தணிக்கைத்துறைக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கியுள்ளது. சுதந்திரமான ஜனநாயக இந்தியாவை வழிநடத்த இந்த அமைப்பிற்கு கடமை உண்டு. கடந்த கால செயல்பாடுகளிலும் அந்த நிலைபாடு இருந்தது. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 148 இதனை வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணையம், நீதிமன்றம், நீதிபதிகள் போன்றவை தனித்துவமான மற்றும் சுதந்திரமான அமைப்பாக செயல்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை , அதன் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாக இருக்கிறது. தேர்தல் ஆணையா்கள் நியமனங்களில் நம்பகத்தன்மை இல்லை. இ.வி.எம் இயந்திரத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்போதைய தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிகளை அறிவிப்பதாக இருந்தாலும், எதிர்கட்சிகள் புகார் கொடுப்பதாக இருந்தாலும், ஆட்சில் இல்லாத கட்சியின் கருத்துகளை கேட்பதில் அலட்சியம் காட்டுகிறது.
கணக்கு தணிக்கை தலைமை அலுவலர் பதவி என்பது மிகவும் முக்கியமானது. சுதந்திரமாக செயல்படுவோம் என தெரிவித்து பொறுப்பேற்கின்றனர். ஆனால் சி.ஏ.ஜி நியமிப்பதில் ஒரு தெளிவான நடைமுறை இருப்பது போல தெரியவில்லை. கொலிஜியம் போல சுதந்திரமாக செயல்பட ஒரு அமைப்பு வேண்டும். நியமனம் குறித்து துணை சி.ஏ.ஜி ஒருவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
8வது சம்பள கமிஷனை அமல்படுத்தாதது மற்றும் மண்டலங்களில் ஆள் சேர்ப்பதில் சமநிலையில்லை என கோரிக்கையாக வைத்திருக்கின்றனர். இந்தி பேசாத மாநிலங்களை தவறாக கையாளப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. இந்த அமைப்பின் மீது தாக்குதல் நடத்துவது என்பது பொதுமக்களின் நிதி மீது தாக்குதல் நடத்துவதற்கு சமம். அரசின் வரவு செலவுகளை சரியான கணக்கு தாக்கல் செய்வதற்கும், சரியான நிர்வாகத்திற்காகவுமே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
1989ம் ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கை தேசிய அரசியலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது, சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழலை வெளிப்படுத்தியது. அப்போதைய தலைவர் சதுர்வேதி சிறப்பாக விசாரித்தார். அவருடைய புத்தகத்தில் என்னுடைய கருத்தும் இடம் பெற்று இருந்தது. அதன் பின்பாக பாஜகவில் சேர்ந்து 1992- 98 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு கர்நாடகா கவர்னராகவும் நியமிக்கப்பட்டார். இது போன்ற முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அரசியலமைப்பு பொறுப்புகளுக்கு செல்லக்கூடாது. மாநில, மத்திய அரசுகளில் பொறுப்புகள் ஏற்கக்கூடாது.
ரபேல் விவகாரத்தில் சிஏஜி அறிக்கையில், பண பரிவர்த்தனைகளில் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அந்த அறிக்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் சி.ஏ.ஜி அதன்பின்பாக அரசு பொறுப்புகளை ஏற்கவில்லை. சி.ஏ.ஜி அமைப்பு சுதந்திரமாக செயல்பட தேவை இருக்கின்றது.
இதில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை மதிப்பதில்லை, அனைத்தையும் தங்களுக்கான சாதனைகளாகவே பார்ப்பதாக கருத்துக்கள் நிலவுகிறது. எந்த ஏ.ஐ கருவியும் இதனை செய்ய முடியாது. இதில் ஏ.ஐ ஒரு கருவியாக மட்டுமே இருக்கும். அது மனித சக்திக்கு மாற்றாக இருக்காது, அப்படி மாறினால் அது பெரிய ஆபத்தாக அமையும்.
ஊழல் மட்டும் இன்றைய இந்தியாவின் பெரிய பிரச்சனை இல்லை, மதவாதம், சர்வாதிகாரம் ஆகியவற்றை தவறாக வழிநடத்தப்படுவது பெரும் பிரச்சனையாக உள்ளது. நான் ஒட்டுமொத்தமாக குறைகூறவில்லை. இதில் நிதர்சனமான உண்மை இருப்பதாகவே கூறினார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி .கே . ரங்கராஜன், சி.ஏ.ஜி அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது குறைந்து வருவது அதிர்ச்சியளிப்பதாகவும், கவலை அளிக்கக்கூடிய நிலையில் உள்ளதாகவும், இது தவறான எச்சரிக்கை எனவும் பேசினார்.
மாணவர்களை தோளில் சுமந்து செல்லும் அவலம்… விடிவுகாலம் பிறக்குமா?