சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கோரிக்கை மனுவை வழங்கினார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்றும், தமிழக அரசு கோரிய நிவாரண தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவறறை பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளதாக, அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.