அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்ஜிஆரை போலவே தொப்பி, கண்ணாடி, சால்வை போர்த்தி விட்டார்கள் தொண்டர்கள் . எடப்பாடி பழனிச்சாமியும் அவற்றை அணிந்து சிறிது நேரம் எம்ஜிஆர் ஆக தொண்டர்களுக்கு காட்சி கொடுத்தார் . இதன் மூலம் தனது ஆதரவாளர்களை குஷிப்படுத்தி இருந்தாலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இது கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுமட்டுமல்லாது எம்.ஜி.ஆர் வகுத்த அதிமுக விதிகளை மாற்றி இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறது. இதுகுறித்து முன்னாள் அதிமுக எம்பி கே. சி. பழனிச்சாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக-வின் கட்சி விதிகளை திருத்தம் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை! இதில் எடப்பாடி பழனிசாமி மட்டும் விதிவிலக்கா என்ன? என்று கேட்கிறார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் வகுத்த விதிகளின்படியும் இந்திய ஜனநாயகத்தின் படியும் தேர்தலில் எத்தனை பேர் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமி வகுத்த விதிகளின்படி பொதுச் செயலாளருக்கு போட்டியிட வேண்டுமென்றால் 10 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு வேண்டும் மற்றும் ஆதரவு கொடுத்தவர்கள் மற்றவர்களுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது. அதிமுகவில் மொத்தமாகவே 70 மாவட்டங்களே உள்ளன. அதன்படி அதிகபட்சமாக 7 பேருக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியாது!
இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது. அதனால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுத்த விதம் செல்லாது என அறிவிக்க வேண்டும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தற்பொழுது வரை உள்ள தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாமென உத்தரவிட வேண்டும் என்று அதிமுகவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.