Homeதிருக்குறள்74 - நாடு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

74 – நாடு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

74 - நாடு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
       செல்வருஞ் சேர்வது நாடு

கலைஞர் குறல் விளக்கம்செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.

732. பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
        ஆற்ற விளைவது நாடு

கலைஞர் குறல் விளக்கம்பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.

733. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
        கிறையொருங்கு நேர்வது நாடு

கலைஞர் குறல் விளக்கம்புதிய சுமைகள் ஒன்றுதிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு. அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்.

734. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
       சேரா தியல்வது நாடு

கலைஞர் குறல் விளக்கம்பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.

735. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
        கொல்குறும்பும் இல்லது நாடு

கலைஞர் குறல் விளக்கம்பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும் அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்.

736. கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
        நாடென்ப நாட்டின் தலை

கலைஞர் குறல் விளக்கம்எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான். நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்.

737. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
        வல்லரணும் நாட்டிற் குறுப்பு

கலைஞர் குறல் விளக்கம்ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்.

738. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
       அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

கலைஞர் குறல் விளக்கம்மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை,உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்.

739. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
       நாட வளந்தரும் நாடு

கலைஞர் குறல் விளக்கம்இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.

740. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
        வேந்தமை வில்லாத நாடு

கலைஞர் குறல் விளக்கம்நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்.

MUST READ