தமிழக பாஜக தலைவர் நியமன விவகாரங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் கவனித்து வருவதாகவும், அவர் அதிமுகவை முழுமையாக கட்டுப்படுத்துவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வருகை மற்றும் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர் காணலில் கூறியிருப்பதாவது:- அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று எடப்பாடி மட்டும் சொல்லவில்லை. கேசவ விநாயகம் ஒரு அறிக்கை தருகிறார். நயினார் நாகேந்திரன் 4 கோடி பிடிபட்ட விவகாரத்திற்கு அண்ணாமலைதான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார். நிர்மலா சீதாராமன் முழுக்க முழுக்க தற்போது அதிமுகவை கட்டுபடுத்துகிறார். செங்கோட்டையனை, தம்பிதுரையை, சி.வி. சண்முகத்தை அவர் சந்தித்து கொண்டிருக்கிறார். நிர்மலா சீதாராமன் தரப்பு ஆள் யார் என்றால் கே.டி.ராகவன். அண்ணாமலை முதன் முதலில் ஹனிட்ராப் வீடியோ எடுத்து அசிங்கப்படுத்திய நபர் கே.டி.ராகவன் ஆவார். அவர் கட்சியில் வலிமையான நபராக வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் முதலிலேயே அவரை ஹனிட்ராப் வீடியோ எடுத்து அண்ணாமலை ஒழித்துக்கட்டினார். தற்போது கே.டி.ராகவன் விஸ்வருபம் எடுத்து அண்ணாமலையை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
தமிழ பாஜக தலைவர் தேர்வு செய்யும் விவகாரத்தை நிர்மலா சீதாராமன் தான் கையாண்டு வருகிறார். அதனால் கே.டி.ராகவன் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு பாஜகவுக்கு யாராவது ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம். அல்லது ஒரு கமிட்டியாக இருக்கலாம். உளவுத்துறை தகவல்கள் எல்லாம் நயினார் நாகேந்திரனுக்கு தான் வாய்ப்பு என்று சொல்கிறது. நயினார் இருபக்கமும் பயன்படுவார். அவர் திமுக உடன் உடன்பட்டு போவார். அதிமுகவுடனும் உடன்பட்டு போவார். அண்ணாமலை போன்று முரண்டு பிடிக்க மாட்டார். லூலு மால் தற்போது எழும்பூர் ரயில் நிலையம் அருகே வர உள்ளது. அவர்களிடம் அண்ணாமலை பணம் பெற்றுக்கொண்டு அமைதி ஆகிவிட்டார்.
அதிமுக உடன் கூட்டணி என்று பாஜகவினர் சொல்லி வருகிறார்கள். அரித்மேட்டிக் படி பார்த்தால் ஒன்று + ஒன்று = 2. ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகாது. ஏனென்றால் பாஜக தொண்டன் அதிமுக எதிர்ப்பாக தான் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் எடப்பாடியால் பாஜக எதிர்ப்பில் வளர்க்கப்பட்டுள்ளார். பாஜக தங்களுக்கு 100 தொகுதிகள் வேண்டும் என்று அதிமுகவிடம் கேட்டிருக்கிறார்கள். அண்ணாமலை இருந்தால் அதை வைத்து பிளாக்மெயில் செய்து கொண்டிருப்பார். அதனால் அண்ணாமலையை வைத்துக் கொண்டு தொகுதி பங்கீடும் செய்ய முடியாது. பிரச்சாரமும் செய்ய முடியாது. அனைத்தும் ஒரு விதமான மிரட்டலுடன் தான் இருக்கும். நயினார் என்றால் எந்த கட்சியுடனும் உடன்பாட்டிற்கு வந்துவிடுவார். அதனால் தற்போது அண்ணாமலை தனிக்கட்சி தொடங்காமல், பாஜகவை தொல்லை பண்ணாமல் இருக்க வேண்டும்.
இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு நாளை வரும் பிரதமர் மோடியிடம், தமிழக பாஜக தலைவர் விவகாரம் தொடர்பாக பேச அரை மணி நேரம் ஒதுக்கும்படி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே 75 வயது ஆகிவிட்டதால் அவருக்கு ஆர்எஸ்எஸ் தரப்பில் இருந்து ஓய்வை அறிவிக்க வலியுறுத்தப்படுகிறது. இதனால் இந்த நேரத்தில் அவர் தலையிட விரும்பவில்லை. பாஜகவுக்கு முக்கியமாக என்ன என்றால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விஷயங்களில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். அதனால் திமுகவுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு மசோதாவை எதிர்த்து திமுக வழக்கு தொடரப்படும் என்று அறிவித்தது. ஆனால் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்து விட்டது. பாஜக எதிர்ப்புக்கான அடித்தளமாக தமிழகம் திகழ்கிறது. அதனால் அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாஜகவினர் நினைக்கின்றனர்.
அதில் மிகவும் முக்கியமான நடவடிக்கை என்பது அண்ணாமலை நீக்கம். அண்ணாமலை நீக்கம் வந்தால் அவர் தனிக்கட்சியை தொடங்குவார் என்பதுதான் தற்போது வரை கிடைக்கும் அறிகுறிகளாகும். ஏப்ரல் 12 அல்லது 14ஆம் தேதிக்கு பின்னர் அண்ணாமலை நீக்கம் உறுதியாகும். அவர் நீக்கப்பட்டால் தனிக்கட்சி தொடங்குவார். புதிய தலைவராக நயினார், தமிழிசை, பொன்னார் அல்லது ஒரு கமிட்டியா? என்பது பின்னர்தான் தெரியும். 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக வலிமையான தலைவரை தான் தேர்வு செய்யும். ஆனால் அண்ணாமலை வலிமையான தலைவர் கிடையாது. அவர் எல்லோரையும் குழப்பி, மிரட்டி சம்பாதிக்கும் தலைவர் ஆவார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.