நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால், பொது தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாஙக வேண்டிய வேண்டாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தி – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நேற்று விடிய விடிய தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்திருந்து எரிபொருட்களை நிரப்பி சென்றனர். போர் ஏற்பட்டால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்கிற அச்சத்தில் பலரும் தேவைக்கு அதிகமான அளவில் எரிபொருளை வாங்கி சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகின.
இந்த நிலையில், எரிபொருள் போதிய அளவு கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாங்க வேண்டாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் போதிய அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், தங்கள் நிறுவனத்தின் எரிபொருள் விநியோக வழித்தடங்கள் சீராக இயங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பீதியுடன் எரிபொருளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தங்களுடைய அனைத்து விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் உடனடியாக கிடைப்பதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அமைதியுடன் இருந்து தேவையற்ற அவசரத்தை தவிர்ப்பதன் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கிட தங்களுக்கு உதவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவ்வாறு செய்வதன் மூலம் தங்களுடைய எரிபொருள் விநியோக வழித்தடங்களை தடை இன்றி இயங்க வைக்ககும் என்றும், அனைவருக்கும் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.