டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை சூட்கேசில் அடைத்து விட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வடமேற்கு டெல்லியின் தயால்பூர் பகுதியை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் தனது வீட்டின் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சிறுமி புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், உறவினர் வீட்டிற்கு சென்றுபார்த்தபோது சிறுமி அங்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள 6 மாடி குடியிருப்புக்கு சிறுமி சென்றதாக அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு உட்புறமாக பூட்டிக்கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் கதவை உடைத்துச்சென்று உள்ளே பார்த்தனர். அப்போது சிறுமி, சூட்கேசுக்குள் அடைக்கப்பட்ட நிலையில், சுயநினைவு இன்றி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மருத்துவ பரிசோதனையில் சிறுமியின் உதடு மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டது தெரிய வந்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொடூர கொலை ச தொடர்பாக தயாள்பூர் காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.