2026 சட்டமன்றத் தேர்தல் வரை பாமகவின் தலைவராக தானே தொடர்வேன் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உடனான மோதல் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து நடத்திய பேச்சுவார்த்தை பலனின்றி டிராவில் முடிந்தது. எனக்கும் செயல் தலைவருக்கும் போய் கொண்டிருக்கும் பிரச்சினை உங்கள் யாருக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பு இல்லை. சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருவர் யார் என்று உங்களுக்கு தெரியும். பாமக தலைவர் பதவியை கொடுக்கிறேன் என்று சொல்லியும் அன்புமணி ராமதாஸ் நம்பவில்லை. எழுதி கொடுக்க சொல்லுங்கள் என்றார். என்னை தேடி வந்த 14 பஞ்சாயத்துகாரர்களும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள். அதன் பின்பு எனக்கு கோபம் பொங்கி எழுந்தது. நீயா? நானா? பார்த்துவிடுவோம் என முடிவெடுத்துவிட்டேன். அன்புமணி எல்லாம் தனக்கே வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வருகிறார் . என்னை தைலாபுரத்தில் இருந்து பேரன், பேத்திகளோடு விளையாடி கொண்டு இருக்குமாறு சொல்கிறார்.
46 ஆண்டுகள் கட்சியை கட்டிக்காத்த எனக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் கட்சியின் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? இன்னும் ஓரிரு ஆண்டுகள் கட்சியின் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? என்னை சந்திக்கக் கூடாது என்று ஒவ்வொரு நிர்வாகிக்கும் அன்புமணி தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். ஒவ்வொரு செங்கலாக பார்த்து கட்டி எழுப்பிய பாமக என்ற மாளிகையில் நான் யார் குடியமர்த்தினேனோ அவரே வெளியே தள்ளிவிட்டார். அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும். குருவை மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால் தந்தையை மிஞ்சிய தனையன் கூடாது. இதுவே நீதி, நேர்மை, தர்மம். குலசாமி என்று கூறிக் கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள். எல்லாம் ஐயா தான் என்று சொல்லிக் கொண்டே பாதாளத்தில் தள்ளப் பார்க்கிறார்கள். அய்யாவின் புகழ், பெருமையை பேசுவதே எங்கள் நோக்கம் என்று சொல்லிக்கொண்டே சிறுமைப் படுத்துகின்றனர். என்னையே குறிவைத்து இலக்காக்கி தாக்குகின்றனர். உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசீனப்படுத்தி, என் உருவப்படத்தை மட்டும் வைத்து உற்சவம் செய்கிறார்கள். என்னை நடைபிணமாக்கி விட்டு, நாடு முழுவதும் என் பெயரில் நடைபயணம் செல்கின்றனர். இது எல்லாமே நாடகம்.
மோடி பதவி ஏற்பு விழாவுக்கு டெல்லி செல்லும்போது கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அன்புமணி கூறினார். நான் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி 2 சொட்டு கண்ணீர் விட்டார். நான் எதுவும் சொல்லாமல் தைலாபுரம் வந்துவிட்டேன். 6 – 7 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அன்புமணிக்கு இருந்துள்ளது. அன்புமணி எப்படி தலைவர் ஆனார் என்று சிலருக்கு தெரியும். சிலருக்கு தெரியாது. எங்கள் குடும்ப பெண்கள் அரசியலில் ஈடுடக்கூடாது என்று சவுமியாவிடம் சொன்னேன். ஆனால் இப்போது நடப்பது உங்களுக்கு தெரியும். 40 தொகுதிகளை தேர்ந்தெடுத்து கட்சி பணிகளை செய்தோம். அதற்கு அன்புமணி ஒத்துழப்பு தரவில்லை. வெற்றி பெற்றால்தான் நம்மை தேடி கூட்டணி கட்சிகள் வரும். என்னிடம் கெஞ்சி, கூத்தாடி, வாதாடி தருமபுரியில் சவுமியா போட்டியிட்டார். தருமபுரியில் முதலில் தான் நிற்பதாக சொன்ன அன்புமணி, பின்னர் சவுமியா நிற்பதாக சொன்னார். தனது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொன்னதற்கு எதிர்மாறாக அன்புமணி செயல்பட்டார்.
உழைப்பதற்கு அன்புமணி தயாராக இல்லை. கட்சியை அவர் ஒழுங்காக நடத்தவில்லை. அதனால்தான் அன்புமணியின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தல் முடியும் வரை நானே பாமக தலைவராக தொடர்வேன். தேர்தல் முடிந்த பிறகு எல்லாவற்றையும் அன்புமணி வாங்கிக்கொண்டு செல்லட்டும். அய்யா சொன்னது போல செயல்தலைவராக செயல்படுவேன் என்று அன்புமணி சொல்லியிருக்க வேண்டும். அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க மாட்டேன்.. 18 வயது நிறைந்த வாக்களிக்கும் மக்கள் அனைவரும் என் பக்கமே உள்ளனர். எனக்கு மக்களும், நாடும் தான் முக்கியம். பாமகவோடு கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு எல்லாம் தெரியும். அவர்கள் முடிவு செய்வார்கள். பாமகவின் தலைவர் பதவி 3 ஆண்டுகள் தான். அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.