நெல் ஜெயராமன் மறைவின் போது அவரது மகனின் படிப்பிற்கான செலவினை தம்பி சிவகார்த்திகேயனே ஏற்பதாக கூறி இன்று வரை அதனை கடைபிடித்து வருவது மிகவும் பெருமையாக உள்ளதென டைரக்டா் இரா.சரவணன் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ” பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் பயணத்தை தொடங்கி, சுமார் 169 வகையான பாரம்பரிய, அரிய வகை நெல் வகைகளை அண்ணன் நெல் ஜெயராமன் மீட்டெடுத்துள்ளார். இவர் மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகப் போராடியவர் ஆவார். இயற்கை விதை நெல் மீட்பாளர் விருது, இவரது பணிகளை அங்கீகரிக்கும் வகையில், தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு பாரம்பரிய அறிவுக்கான விருது, மற்றும் இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான சம்மான் விருதையும் (SRISTI) மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி கௌவுரவித்துள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் புற்றுநோயால் அவதிப்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்திருந்தாா். பின்னர் 2018, டிசம்பர் 6 அன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
மேலும், அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்த போது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் தம்பி சிவகார்த்திகேயன் கூறியிருந்தாா். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்களே தவிர அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள். ஆனால், தம்பி சிவகார்த்திகேயன் சொன்ன சொல் தவறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவைக் கட்டி வருகிறார். பணம் கட்டுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் போன் செய்து விசாரிப்பார். அன்பும் அக்கறையுமாகப் பேசுவார்.
இந்த வருடம் சீனிவாசன், கல்லூரி படிப்பில் கால் வைக்கிறார். எந்தக் கல்லூரி, என்ன படிப்பு என்கிற விவரங்களை விசாரித்து, கோவை கற்பகம் கல்லூரியில் பேசி அவரைச் சேர்த்திருக்கிறார் சிவா. நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார் சிவகார்த்திகேயன். அப்பலோ மருத்துவமனையில் மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், பாண்டிச்சேரி படப்பிடிப்பில் இருந்து ஓடிவந்து, நெல் ஜெயராமனின் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நானிருக்கிறேன் அண்ணன்’என சிவகார்த்திகேயன் நம்பிக்கை சொன்ன காட்சி, அப்படியே நெஞ்சுக்குள் விரிகிறது. நம்பிக்கையாகவே நின்று காட்டும் தம்பிக்கு நன்றி என கூறினாா்.
புதிய தளத்தில் கால் பதிக்கும் ரிலையன்ஸ்…மக்களை ஈா்க்கும் புதிய சலுகைகள்…