நடிகர் பிரபாஸ், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். அதை தொடர்ந்து பான் இந்திய படங்களில் நடித்து வரும் பிரபாஸ் தற்போது ஸ்பிரிட், சலார் 2, கல்கி 2898 AD போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், இயக்குனர் மாருதி இயக்கத்தில் தி ராஜாசாப் எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார். காமெடி கலந்த ஹாரர் ஜானரில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸுடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு, ரித்தி குமார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படம் 2025 டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வரும் தி ராஜாசாப் திரைப்படம் திட்டமிட்டபடி திரைக்கு வருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனமும், ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இந்நிலையில் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், பீப்பிள் மீடியா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை முடித்து ரிலீஸ் செய்வது, நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் வெளிப்படை தன்மை போன்ற பல விஷயங்களில் பீப்பிள் மீடியா நிறுவனம் ஒப்பந்தத்தை மீறி விட்டதாக மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தி ராஜாசாப் படத்திற்காக முதலீடு செய்த ரூ. 218 கோடியை பீப்பிள் மீடியா நிறுவனம் வட்டியுடன் திரும்பத் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் தி ராஜாசாப் திரைப்படம் அறிவித்த தேதியில் வெளியாகுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
- Advertisement -