கூலி படத்தை கடுமையாக விமர்சித்த சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் நேற்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில், கூலி படம் குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டு இருப்பது ரஜினி ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

அதாவது ப்ளூ சட்டை மாறன், “நண்பனை கொலை செய்தவனை பழிவாங்க ஹீரோ வருவது தான் கூலி படத்தின் கதை. பான் இந்தியா படம் என்றால் இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். மற்ற மொழி நடிகர்களை நடிக்க வைத்தால் மட்டுமே அது பான் இந்தியா படம் ஆகாது. கதை எழுத துப்பு இல்லாத ஒருவர்தான் இந்த படத்தின் கதையை எழுதி இருப்பார். லோகேஷ் கனகராஜுக்கு கொலை, கஞ்சா கடத்துவதை தவிர வேறு எதுவும் தெரியாது. நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் சரியாக பயன்படுத்தப்படவில்லை. அமீர்கான் கேமியோ ரோலில் வந்து பீடியைப் பற்றி மட்டும் தான் பேசுகிறார். இதுக்கு ஜெயிலர் படமே நல்ல படமாக தெரிகிறது. இந்த படத்தை சாதாரண மொக்கை படம் என்று நினைத்தால் சராசரியாக தோன்றும். காட்டு மொக்கை என்று நினைத்தால் படத்தை பார்க்கவே பிடிக்காது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் கோபமடைந்த ரஜினி ரசிகர்கள், ரஜினியின் மாஸ் காட்சிகள் சூப்பராக இருக்கிறது. ரசிகர்களுடன் கனெக்ட் ஆகி இருக்கிறது என்றும் படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள் என்றும் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.