நீலாங்கரை பகுதியில் மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ.17.5 இலட்சம் பணமோசடி செய்த வழக்கில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.
சென்னை, மயிலாப்பூர், நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த திவ்யா (43) என்பவர் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்துக் கொண்டு பள்ளி ஆசிரியராக வேலை செய்து வருவதாகவும், கடந்த 2019-ம் ஆண்டு, தான் நீலாங்கரையில் வசித்து வந்த போது, கொட்டிவாக்கம் குப்பத்தைச் சேர்ந்த அபினாஷ் அவரது மனைவி செல்வி ஆகியோர் நடத்திய மாத ஏலச்சீட்டில் ரூ.4 இலட்சத்திற்கான சீட்டில் சேர்ந்து, மாதந்தோறும் பணம் செலுத்தி வந்துள்ளாா். பின்னர் ரூ.5 இலட்சத்திற்கான ஏலச்சீட்டிலும் சேர்ந்து பணம் செலுத்தி வந்திருக்கிறாா். இந்நிலையில், அபினாஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் 2020-ம் ஆண்டு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், விரைவில் கொடுத்துவிடுவதாகவும் கூறி, ரூ.3.5 இலட்சம் பணத்தை கடனாக பெற்றுச் சென்றுள்ளாா். பின்னர் 2021-ம் ஆண்டு ஏலச்சீட்டு முதிர்வடைந்து பணம் கேட்டபோது, பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.
2022-ம் ஆண்டு தனது 2 ஏலச்சீட்டுகளின் பணம் மற்றும் கடனாக பெற்ற பணம் ரூ.3.5 இலட்சம் ஆகியவற்றை கேட்டபோது, இருவரும் பணத்தை தரமுடியாது என மிரட்டி அனுப்பிய பின்னர் அபினாஷ் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் வீட்டை காலி செய்து தலைமறைவாகிவிட்டாா். இதனையடுத்து திவ்யா, J-8 நீலாங்கரை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். J-8 நீலாங்கரை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், தீவிர விசாரணை செய்தததில் எதிரிகள் இருவரும் புகார்தாரர் திவ்யா மற்றும் அப்பகுதியில் பல நபர்களிடம் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி பணம் பெற்றும், கடனாக பல லட்சங்களை பெற்றும் அனைவரது பணத்தையும் அபகரித்துக் கொண்டு குடும்பத்துடன் தலைமறைவானதும் தெரியவந்தது.

அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி மோசடியில் ஈடுபட்ட எதிரி செல்வி (32) க/பெ. அபினாஷ், நியூ காலனி, தையூர், கேளம்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எதிரி செல்வி விசாரணைக்கு பின்னர் நேற்று (19.09.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அபினாஷ் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் இளைஞர் கொலை…குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்


