நடிகர் சூர்யா புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் நடிப்பின் நாயகன் என்று பலராலும் கொண்டாடப்படுபவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் கடைசியாக ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து சூர்யா, ‘கருப்பு’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா, வெங்கி அட்லுரி, ஜித்து மாதவன் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி ஏற்கனவே ‘சூர்யா 46’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ‘சூர்யா 47’ படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து சூர்யாவின் 48வது படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கப் போவதாகவும் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சூர்யா தனது 2D நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் இவர், புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி ‘ழகரம்‘ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளாராம் சூர்யா. இந்நிறுவனத்தின் மூலம் தான் தன்னுடைய 47, 48வது படங்களை தயாரிக்க இருக்கிறார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.