பா. ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பா. ரஞ்சித். இவர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர், ‘வேட்டுவம்’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து பா. ரஞ்சித், நடிகர் சூர்யாவை இயக்கப் போவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இந்த படத்தை நடிகர் சூர்யா, புதியதாக தொடங்க இருக்கும் ‘ழகரம்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க உள்ளார் என பேச்சு அடிபடுகிறது. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது. இந்நிலையில் சூர்யா 48 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர இந்த படம் பா. ரஞ்சித்தின் கனவுத் திட்டமான ‘ஜெர்மன்’ என்ற கதையை மையமாக வைத்து பேண்டஸி படமாக உருவாகும் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.