
1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்
கலைஞர் குறல் விளக்கம் – பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்தபோய் மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.

1232. நயந்தவர் நல்காமை கொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்
கலைஞர் குறல் விளக்கம் – பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதைச் சொல்லிக் காட்டுகின்றன
1233. தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்
கலைஞர் குறல் விளக்கம் – தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது, காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.
1234. பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்
கலைஞர் குறல் விளக்கம் – பருந்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் சுழன்று விழுகின்றன, காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.
1235. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியோடு
தொல்கவின் வாடிய கொள்
கலைஞர் குறல் விளக்கம் – வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.
1236. தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியார் எனக்கூறல் நொந்து
கலைஞர் குறல் விளக்கம் – என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.
1237. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து
கலைஞர் குறல் விளக்கம் – நெஞ்சே! இரக்கமற்ற என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கு வாடி வதங்கும் என தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?
1238. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்
கலைஞர் குறல் விளக்கம் – இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவேளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டுவிட்டது.
1239. முயங்கிடைத் தணவளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்
கலைஞர் குறல் விளக்கம் – இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதி தாதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.
1240. கண்ணின் பசப்போ பருவரல் எள்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு
கலைஞர் குறல் விளக்கம் – பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்து விட்டது.


