அன்புமணி பொறுப்பேற்ற பிறகு பாமக சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது என்று அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், டாக்டர் ராமதாஸ் ஆதரவு பாமகவின் செய்தி தொடர்பாளருமான அருள் செய்தியாளர்களை சந்தித்த போது, பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி A பார்ம், B ஃபார்ம் கையெழுத்திடுவது நான் தான் என்று கூறியுள்ளார். வாழ்நாளில் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை பாமகவிற்காக அர்ப்பணித்து இயக்கத்தை உருவாக்கியவர் அய்யா ராமதாஸ். கட்சியை துவங்கிய நாளிலிருந்து யாருடைய தலையிடும் இல்லாமல் 2006 வரையிலும் செயல்பட்டார்.
ஆனால் அன்புமணி தலையிட்டுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தது என பகிரங்கமாக குற்றம் சாட்டிய அருள், பாமக துவங்கியதில் இருந்து இன்று வரை 55 சட்டமன்ற உறுப்பினர்கள், 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐந்து மத்திய அமைச்சர்களை பெற்றுக் கொடுத்தவர் ராமதாஸ் தான். எனவே ராமதாஸ் அவர்களை தவிர பாமகவை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அன்புமணியின் தலையீட்டுக்கு பின், பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சி அடையவே இல்லை. வெறும் மூன்று எம்.எல்.ஏ, அதன் பின் ஜீரோ என பாமக கட்சியின் நிலைமை கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாமக என்ற கட்சி அங்கீகாரத்தையும் இழந்து நிற்கிறது. பாமக கட்சி தன்னுடையது என்று அன்புமணி கூறினால் , அது டாக்டர் ராமதாஸின் உழைப்பே திருடுவதற்கு சமம் என்று கடுமையாக அருள் விமர்சனம் செய்துள்ளார்.

மகன் என்பதற்காக டாக்டர் ராமதாஸ் அய்யாவின் உழைப்பை திருட முடியாது. என்னைப் பொறுத்தவரை பாமக துவங்கியதில் இருந்து, வேறு எந்த கட்சியிலும் உறுப்பினராக இருந்ததில்லை. ஆனால் அன்புமணியுடன் இருக்கின்ற வழக்கறிஞர் பாலு, திமுகவிலிருந்து, மதிமுக, இப்படி பல்வேறு கட்சிகளுக்கு சென்று இப்பொழுது பாமகவில் இணைந்து கட்சியை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கிறார் வழக்கறிஞர் பாலு. தந்தையிடம் சென்று மன்னிப்பு கேட்பது தவறு இல்லை, ஆனால் தவறான உதாரணமாக அன்புமணி மாறிவிடக்கூடாது என்பதற்காக தான் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் என் மீது வாழப்பாடி அருகே நடந்த தாக்குதல் விவகாரத்தில் காவல்துறையால் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்புமணி ஆதரவாளர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் தான் போலீஸ், என் மீதும் ஒருதலைப்பட்சமாக எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். என்னை கத்தி, கட்டையை எடுத்து வந்து தாக்குதல் நடத்திய வீடியோ, கற்களை கொண்டு தாக்கிய காட்சிகளை ஆதாரமாக கொண்டு தான் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று அதற்கான ஆதாரங்கள் அடங்கிய போட்டோக்களை பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் காண்பித்தார்.
மேலும் முக்கியமான குற்றவாளியை பனையூரில் பதுக்கி வைத்துள்ளதாகவும், உண்மையான குற்றவாளி யார் என்றும் காவல்துறைக்கு தெரியும் என்றும் அதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் வைத்துள்ளதாகவும் கூறினார். தேர்தல் ஆணையத்தில் மாம்பழ சின்னம் எனக்கு தான் என்று கொக்கரிப்பது எல்லாம் பொய்யானது. ஜி.கே.மணி தலைவராக இருந்தபோது அவர் கையெழுத்து போட்டார். இப்பொழுது அவரது பதவி காலம் முடிந்துவிட்டது. இப்பொழுது ராமதாஸ் ஐயா, தான் தலைவராக கையெழுத்திடுவார். தர்மபுரி, சேலம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டத்தை கூட்டியபோது ஏராளமான இளைஞர்கள் கூட்டம் எங்களிடம் வந்தது.
பொறுப்பாளர்கள் சிலர் அன்புமணியின் பின்னால் போய் இருக்கலாம்; பாட்டாளி மக்கள் கட்சி என்பது ராமதாஸ் பின்னால் தான் உள்ளது. ராமதாஸ் ஐயா யாரை சொல்கிறாரோ, அவருக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். இதுதான் சத்தியம் என்றார். தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் , சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றார். டாக்டர் ராமதாஸ் தான் எனக்கு சீட்டு வழங்கினார். பாலுவுக்கும் அவர்தான் வழங்கினார். ஆனால் பாலுவை அங்கீகரிக்காமல் மக்கள் தோற்கடித்துவிட்டார்கள். என்னை வெற்றி பெற செய்தார்கள். எனவே என்னை பதவியில் இருந்து நீக்க அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை என சட்டமன்ற உறுப்பினர் அருள் காட்டமாக தெரிவித்துள்ளார்.


