தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் 20ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழுவை நம் தலைவர் விஜய் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். இந்தக் குழு, வருகின்ற 20ஆம் தேதி (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கட்சி தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தேர்தல் அறிக்கை உருவாக உள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கைக் குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள் என்பதை தவெக தலைவர் விஜய் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


