அண்ணாமலைக்கு கனிமொழி எம்பி நோட்டீஸ்
திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி.கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், கனிமொழிக்கு ரூ.830.33 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் கனிமொழி எம்பியும் இன்று அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கனிமொழி எம்.பி. சார்பில் வழக்கறிஞர் மனுராஜ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில், “அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது, கற்பனையானது. தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் நோக்கில் அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அவதூறு வீடியோ வெளியிட்ட அண்ணாமலை ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். நோட்டீஸ் பெற்ற 48 மணிநேரத்தில் அவதூறு வீடியோவை நீக்கி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


